உங்களுக்கு மன அமைதி வேண்டுமா? (சுவாமி சிவானந்தா)
- Get link
- Other Apps
சுவாமி சிவானந்தா கூறியது
தெய்வீக அளவுகோல்கள்
என் அன்பிற்குரிய நண்பர்களே, எத்தனை முறை பிரார்த்தனை செய்யப்பட்டது. எத்தனை தடவை மந்திரங்கள் ஜபிக்கப்பட்டன. எத்தனை முறை விளக்குகள் ஏற்றப்பட்டு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. எத்தனை முறை மணி அடிக்கப்பட்டு, மறை நூல்கள் வாசிக்கப்பட்டன போன்றவற்றால் மனித செயல்களை தெய்வீக அளவு கோல்கள் மதிப்பிடுவதில்லை.
உங்கள் இதயத்தில் எழும் எண்ணங்களின் தரத்தைப் பொறுத்து எத்தகைய வார்த்தைகளை நீங்கள் உங்கள் அண்டை அயலாரிடம் பயன்படுத்துகிறீர்களோ அவற்றைப்பொறுத்து, உங்கள் வாழ்வை நீங்கள் யார் யாருடன் கழிக்க வேண்டும் என்று இறைவன் விதித்திருக்கிறானோ அவர்களுடன் நீங்கள் ஈடுபடும் ஒவ்வொரு செயலையும் பொறுத்தே தெய்வீக் அளவுகோல்கள் மனிதனை மதிப்பிடுகின்றன என்று நான் திட்டவட்டமாக உங்களுக்குக் கூறுகிறேன்.
சுவாமி சிவானந்தா உங்களுக்கு மன அமைதி வேண்டுமா? |
நல்லாரோக்கியமும் பொருளாதாரப் பாதுகாப்பும் மன அமைதிக்கு மிகவும் இன்றியமையாதவை என்பது எல்லோரும் அறிந்ததே.
ஆனால் இவை இரண்டும் தொடர்ந்து இருப்பினும், பலரும் அமைதியின்றி அல்லற்படுகின்றனர், நீங்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்களா?
ஆமாம் என்று நீங்கள் பதில் சொன்னால் மேலும் இதைப்படியுங்கள்.
உங்களது தொல்லை பெரும்பாலும் நீங்களாகவே உண்டாக்கிக்கொண்டது என்பதால், அது தவிர்க்கப்படக்கூடியதே.
நாம் எப்படி என்று பார்ப்போம்.
நீங்கள் அடிக்கடி பிறர் விஷயங்களில் தலையிடுகிறீர்களா? அவர்கள் தவறாகவே இருக்கலாம். ஆனால் அதை முன்னிட்டு நீங்கள் அல்லல் உறுவானேன்?
யாரையும், எதையும், குறை கூறாதீர்கள். பிறருக்குத் தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை கடவுள் உங்களுக்குக் கொடுக்கவில்லை.
எல்லோரும் அவரவர் விருப்பப்படியே நடக்கின்றனர். ஏனெனில் அவர்களுக்குள்ளே இருக்கும் கடவுள் அவர்களை அப்படிச் செய்யத் தூண்டுகிறார்.
உங்கள் அமைதியைப் பாதுகாக்க நீங்கள் உங்கள் சொந்த வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் என்பது ஒரு நல்ல விதியாகும்.
உங்கள் வேலையில் நீங்கள் கவனம் செலுத்துங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக மன அமைதிக்கு முக்கியத்துவம் தருவோர் கடைப்பிடிக்க வேண்டிய நியதி இது.
இந்த உலகத்தில் எதுவுமே உங்கள் கவனத்தை வேண்டுவதில்லை. அனைத்தையும் கவனிக்க ஒரு ஆண்டவன் இருக்கிறார்.
உண்மையில்,உங்களையும் கவனிப்பது அவர் தானே. இந்த உண்மையை மறக்கக்கூடாது.
நான் திரும்பவும் கூறுகிறேன்.
உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். எவரையும் எதையும் குறை கூறாதீர்கள்.
குறை கூறுதல் என்பது திட்டுவதற்கு நிகர்.
ஏன்? எது நடந்தாலும், அது கடவுளின் இச்சையால் நடக்கிறது. கடவுளின் அனுக்கிரகம் இன்றி எதுவுமே நிகழ்வதில்லை. ஏதாவது நிகழ்ந்தது என்றால் அது உங்கள் பார்வையில் நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ இருக்கலாம். அதற்கு கடவுளின் அனுமதி இருக்கிறது என்றுதான் பொருள்.
நீங்கள் அதைக் கண்டனம் செய்தால் கடவுளின் விருப்பத்தை, கடவுளின் பேரறிவை, கடவுளின் தீர்ப்பை நீங்கள் விமர்சிக்கின்றீர்கள் என்று தானே அர்த்தம். அதைச் செய்யாதீர்கள். உங்களுக்கு அமைதி கிட்டும்.
கடவுள் பொருள்களை முழுமையாகப் பார்க்கிறார். மனிதன் பொருள்களை பகுதியாகப் பார்க்கிறான். மனிதனோ கடந்த காலம் மற்றும் எதிர்காலத்திலிருந்து பிரிந்து நிகழ்ச்சிகளை நிகழ்காலத்தில் மட்டுமே பார்க்கிறான். அதனால்தான் கடவுள் ஒற்றுமையைக் காண்கிறார். மனிதன் வேற்றுமையைக் காண்கிறான்.
கடவுள் பூரணமாக நியாயத்தைக் காணும் அதே தருணத்தில் மனிதனோ அதைக் காண்பதில்லை.
நீங்கள் உங்களை கடவுளின் ஸ்தானத்தில் வைத்துப் பாருங்கள். நீங்களே கடவுள் என உணருங்கள். பிரபஞ்சம் முழுவதும் உங்களது படைப்பே என்றும், அனைத்தும் உங்கள் விருப்பத்தாலேயே நிகழ்கின்றன என்றும் உணருங்கள்.
உடனேயே உங்களுள் அபரிமிதமான அமைதியும் ஆற்றலும் ஊற்றெடுப்பதை நீங்கள் உணர்வீர்கள்.
மேலும் படிக்க
சுவாமி சிவானந்தா |
பிறர் உங்களைக் காரணமின்றி திட்டுவதாகவும், காரணமின்றி துன்புறுத்துவதாகவும் நீங்கள் கூறுகின்றீர்கள்.
அது உண்மையாகவே இருந்தாலும் கூட, அதற்காக அலட்டிக் கொள்ளாதீர்கள்.
நிலைமையைப் பொறுமையுடன் சமாளியுங்கள்.
இக்கட்டான நிலைமைகளைச் சமாளிப்பதில் அமைதி ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம் என்பதை நீங்கள் காண்பீர்கள்.
யாராவது உங்களைத்திட்டினால் கண்களை மூடிக் கொண்டு பொறுமையாக இருங்கள்.
பிறர் அவர்கள் விருப்பம் போல் நினைக்கட்டும்.
அவர்கள் விரும்புவதைச் சொல்லட்டும்.
இந்த உலகம் முட்டாள்கள் நிறைந்தது. நீங்கள் அறிவுடையவராக விளங்குங்கள்.
எல்லோர் முன்னிலையிலும் பணிவுடன் இருங்கள்.
எந்த நிலைமையிலும் அடக்கமாக இருங்கள். நான் உயர்ந்தவன் அல்லது தாழ்ந்தவன் என்ற எண்ணத்தை விடுத்து அனைவரிடமும் அனைத்திடத்தும் கடவுளைக்காணக் கற்றுக்கொண்டால்தான் இது சாத்தியமாகும்.
கடவுள் அப்படி விரும்புகிறார். எனவே அது அப்படி இருக்கட்டும். இவ்வாறு உங்களுக்குள் சொல்லிக் கொண்டு பிறர் உங்களை நிந்திக்கையில் நீங்கள் மௌனமாக இருங்கள்.
கலக்கம் அடையாதீர்கள். பழிச் சொற்களை ஏற்றுக்கொண்டால் அடக்கத்திலும் தூய்மையிலும் நீங்கள் வளர்ச்சி அடைவீர்கள். ஆன்மீகத்தில் நீங்கள் உயர்வடைவீர்கள்.
உங்களைத் திட்டுபவர் அல்லது துன்புறுத்துபவர் மீது உங்கள் இதயத்தில் எந்தவிதமான பகைமை உணர்ச்சியையும் கொள்ளாதீர்கள்.
இது வெளிப்படையாக கோபத்தைக் காட்டுவதை விட மிகவும் மோசமானது. இது மானஸீகப் புற்று நோய். பகைமையை வளர்க்காதீர்கள்.மறவுங்கள், மன்னியுங்கள்.
இது ஏதோ ஒரு வெறும் லட்சியவாத பழமொழி அல்ல. உங்கள் அமைதியைப் பாதுகாக்க ஒரே வழி இது தான். உள்ளே பகைமையை வளர்ப்பது என்பது ஒருவனுக்கு மிகுந்த கெடுதியைச் செய்யும்.
உங்களுக்குத் தூக்கம் போய்விடும். உங்கள் ரத்தத்தை நீங்கள் நஞ்சாக்குன்கிறீர்கள். ரத்தக்கொதிப்பும், படபடப்பும் உங்களிடம் அதிகரிக்கும்.
பழிச்சொல்லோ, அவதூறே உங்களுக்கு கடந்த காலத்தில் எப்பொழுதோ செய்யப்பட்டது இப்பொழுது அது நடந்து முடிந்துபோன ஒன்று. அது எப்பொழுதோ முடிந்து போன விஷயம். சிந்திய பால் அது. அதையே மீண்டும் மீண்டும் நினைத்து அந்த அவதூறு அல்லது பழிச்சொல்லின் துன்பத்தை ஏன் நீங்கள் நீட்டிக்கிறீர்கள்?
பகைமை மற்றும் வெறுப்பு எனும் ஆறுகின்ற காயத்தை நீங்கள் குத்திக் குத்தி மீண்டும் ஏன் புண்ணாக்குகிறீர்கள்?
இது மிகவும் முட்டாள்தனம் இல்லையா? இந்தச் சிறிய விஷயங்களில் நேரத்தையும் வாழ்க்கையையும் வீணடிப்பது என்பது தகாத ஒன்று.
ஏனெனில் மனித வாழ்வு மிகவும் சுருங்கியது. இந்தத் தீயவழக்கத்தை விடுங்கள். உங்களுக்கு விருப்பமான வேலை ஒன்றில் பூரணமாக மனத்தை லயிக்கச் செய்வதே நீங்கள் செய்ய வேண்டிய சிறந்த காரியமாகும்.
உங்களுக்குப் பிடித்தமான வேலை அல்லது பொழுது போக்கில் நீங்கள் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்களானால் உங்களுக்கு மிகுந்த மனஅமைதி கிட்டும்.
அப்பொழுது ஒன்றைப் பெற்றோம். ஒன்றைச் செய்தோம் என்ற மனத் திருப்தி உங்களுக்குக் கிட்டும்.
மனிதன் வெறும் உணவால் மட்டுமே வாழ முடியாது என்ற பழமொழியை நினைத்துப் பாருங்கள்.
இதை நினைத்து பணத்தைக் காட்டிலும் மன அமைதியே பெரிது என நீங்கள் எண்ணினால் அதிக வருமானத்துடன் கூடிய நீங்கள் விரும்பாத ஒரு காரியத்தைவிட குறைந்த வருமானத்துடன் கூடிய மன அமைதி தரும் ஒரு காரியத்தை நீங்கள் மனமுவந்து ஏற்பீர்கள்.
உலகப் புகழ், உலகப் பெருமையை விரும்பாதீர்கள். மானஸீக மற்றும் பௌதீக அமைதியின்மைக்கு இதுதான் முக்கிய காரணமாகும்.
மேலும் படிக்க
பிறர் உங்களை மதிக்க வேண்டும் என ஏன் நீங்கள் விரும்புகிறீர்கள்? அந்த மற்றவர் பெரும்பாலும் முட்டாள் ஜனங்களே.
இந்த உலகில் பெரும் வெற்றி அடைந்த மகாபுருஷர்கள் கொஞ்சம் ஞானம் உள்ளவர்களேயாவார்கள்.
மற்றவர்களது மதிப்பிற்காக ஏன் இவ்வளவு தூரம் அலட்டிக் கொள்ள வேண்டும்? அதற்குப்பதிலாக கடவுளது ஆசீர்வாதத்திற்காக, ஞானம் மிக்க மகான்களது ஆசிகளுக்காக நாட்டம் கொள்ளுங்கள். இதுவே செய்யத் தகுந்தது. முயலவேண்டியது.
பொதுமக்களின் கருத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்காதீர்கள். பெரும்பாலும் பொதுமக்களின் கருத்து தவறாக உள்ளது.
ஒழுக்கநியதிகள், நன்னெறிகள், மறைநூல் வாக்கியங்கள், பணிவாளர்கள் மற்றும் மகான்களது கருத்துக்களுக்கு முக்கியத்தவம் கொடுங்கள். நீங்கள் தவறவே மாட்டீர்கள்.
பொறாமை அடிக்கடி மன அமைதியைக் குலைக்கிறது. நீங்கள் எவர்மீதாவது பொறாமைப்படுகிறீர்களா?
பொறாமை ஒரு வியாதி. உங்களது அலுவலகத்தில் திரு "அ " உங்கள் பதவி உயர்வைத் தடுத்தார் என்பதோ அல்லது உங்கள் வியாபாரத்தில் திரு "ஆ" போட்டியிட்டுக்குலைத்தார் என்று நீங்களாகக் கற்பனை செய்வது தவறு.
திரும்பத்திரும்ப எண்ணுங்கள். உங்களது முன்னேற்றத்தை எவரும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது.
உங்களது தொழிலும் உங்களது வாழ்க்கையும் உங்கள் முன்வினையால் உருவாக்கப்படுகிறது. நீங்கள் முன்னேறவேண்டும் என்று இருந்தால் உலகம் முழுவதும் ஒன்று திரண்டாலும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது.
அதற்கு மாறாக நடக்க வேண்டுமெனில் அப்பொழுதும் உலகம் முழுவதாலும் உங்களை ஒன்றும் செய்ய இயலாது. ஒவ்வொரு மனிதனும் அவனது விதியினாலேயே ஆளப்படுகிறான்.
ஒருவரை சார்ந்திருப்பது போலத்தென்பட்டாலும் ஒருவரது வாழ்விலிருந்து அடுத்தவருடையது வேறுபட்டது ஆகும். இதை நினைவு கொள்ளுங்கள்.
இந்தக் கருத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு பொழுதும் பிறர் மீது பொறாமை கொள்ளாதீர்கள் அல்லது உங்கள் துன்பத்திற்கு பிறரைப் பழிக்காதீர்கள்.
உங்கள் அமைதியைக் குலைக்கும் உங்களது சூழ்நிலை உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். சூழ்நிலையை மாற்றுவதற்குப் பதிலாக ஒரு வேளை இதில் நீங்கள் தோல்வி அடையலாம்.
நீங்கள் உங்களையே இப்பொழுதை விட நல்ல நிலைமைக்கு மாற்றி அமையுங்கள். இப்படி நீங்கள் செய்தால் வருடக் கணக்காக உங்களுக்குக் கெட்டதாகத் தென்பட்ட சூழ்நிலை அதிசயிக்கத்தக்க விதத்தில் நல்ல விதத்தில் மாறத் தொடங்குவதைக் காண்பீர்கள்.
நீங்கள் மென்மேலும் தூய்மை அடையும் பொழுது சூழ்நிலையும் மென்மேலும் ஒத்தவிதத்தில் வளர்ச்சி அடையும்.
எப்படி? என்று கேட்காதீர்கள். முயன்று பாருங்கள். அனுபவத்தில் தெரியும், நண்பரே.
எது நடந்தாலும் அதைப் பொறுத்துக் கொள்ளுங்கள். எதைக் குணப்படுத்த முடியாதோ அதைப்பொறுத்தேயாக வேண்டும். மகிழ்ச்சி யுடன் பொறுத்துக் கொள்ளுங்கள்.
காலை முதல் நடு இரவு வரை நூற்றுக் கணக்கான வசதிக்குறைவுகள், தொல்லைகள் மற்றும் துன்பங்களுடன் வாழ கற்றுக் கொள்ளுங்கள். பொறுமை, உள்பலம் மற்றும் இச்சாசக்தி உங்களிடம் அதிகரிக்கும். பிரதிகூலமானதை அனுகூலமானதாக நீங்கள் மாற்றி அமைப்பீர்கள்.
மன்னிக்கவும் மேலும் படிக்க எனக்கு சிறிது நேரம் வேண்டும் 🙏🙏🙏
மேலும் படிக்க
- Get link
- Other Apps
Comments
Post a Comment